×

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்: ஏராளமானோர் மயங்கி விழுந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனத்துக்காக கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்தனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால் நேற்று தரிசனம் செய்ய 18 மணி நேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனால் ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆன்லைனில் அதிகபட்சமாக 90 ஆயிரம் பேர் வரை மட்டுமே தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும். ஆனால் அதையும் தாண்டி திருவனந்தபுரம், எருமேலி, நிலக்கல், பம்பை உள்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூலமும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பக்தர்கள் மிக அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

பல மணி நேரம் வரிசையில் காத்திருப்பதால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். இதனால் பக்தர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்த பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் மற்றும் டிஜிபிக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் எந்த பலனும் ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று கேரள உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கூடியது.

பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க சபரிமலை தந்திரியுடன் ஆலோசித்து தரிசன நேரத்தை அதிகரிக்க முடியுமா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது 17 மணி நேரம் நடை திறந்து இருப்பதால் தரிசன நேரத்தை மேலும் அதிகரிக்க முடியாது என்று சபரிமலை தந்திரி தெரிவித்தார். இதனால் வேறு வழிகளை ஆராய தேவசம் போர்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. இன்று முதல் இது அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே நேற்றும் சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்தனர்.

அதன்படி நேற்று தரிசனம் செய்ய 18 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்தக் கூட இடமில்லை. இதனால் சாலை ஓரங்களில் தான் நேற்று பக்தர்கள் வாகனங்களை நிறுத்தினர். நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். நேற்று 18ம்படி முதல் சுமார் ஒன்றரை கிமீ தூரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் பல பக்தர்கள், குழந்தைகள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

18ம் படியில் பக்தர்களை ஏற்றுவதற்கு உள்ளூர் போலீசார் தான் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களுக்குப் பதிலாக இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசார் 18ம் படியில் நிறுத்தப்பட்டு உள்ளனர். தற்போது ஒரு நிமிடத்திற்கு 70 பக்தர்கள் 18ம் படி வழியாக செல்கின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்றும் சபரிமலையில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்து உள்ளனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும்போது பக்தர்களின் மிக நீண்ட வரிசை காணப்பட்டது.

The post சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்: ஏராளமானோர் மயங்கி விழுந்தனர் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Sami ,Thiruvananthapuram ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...